பக்கங்கள்

Showing posts with label அறிவு. Show all posts
Showing posts with label அறிவு. Show all posts

Wednesday, August 1, 2012

தமிழ் மொழியின் சிறப்புகள்

Tamil

1) அந்தமிழ்:- அம் + தமிழ் = அழகிய தமிழ்


2) அருந்தமிழ்:- அருமை + தமிழ் = அருமைபாடுடைய தமிழ்


3) அழகுதமிழ்:- எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ்


4) அமுதத்தமிழ்:- அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ்


5) அணித்தமிழ்:- அணிநலன்கள் அமைந்த தமிழ், தமிழினம் பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ்


6) அன்னைத்தமிழ்:- நம் அன்னையாகவும் மொழிகளுக்கெல்லாம் அன்னையாகவும் விளங்கும் தமிழ்


7) இசைத்தமிழ்:- முத்தமிழில் ஒரு பிரிவு (இசை மொழியின் கூறாவது ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பு)


8) இயற்றமிழ்:- முத்தமிழின் மற்றொரு பிரிவு. ஆயகலை அறுபத்து நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும் அறிவுநூல்கள் அடங்கியது


9) இன்றமிழ்:- இனிக்கும் தமிழ் (ஒலிக்க, உரைக்க, சிந்திக்க, செவிமடுக்க, எழுத, இசைக்க என எதற்கும் இனியது)


10) இன்பத் தமிழ்:- இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும் இலக்கண இலக்கிய மரபும் கொண்டு, கற்பவர்க்கு எஞ்ஞான்றும் இன்பம் பயப்பது.


11) எந்தமிழ்:- எம் + தமிழ் (கால்டுவெல், போப்பு போன்ற பிறமொழிச் சான்றோரும், கற்றதும் 'எந்தமிழ்' என்று பெருமித உரிமை பாராட்டும் தமிழ்)


12) உகக்குந்தமிழ்:- மகிழ்ச்சியளிக்கும் தமிழ்


13) ஒண்டமிழ்:- ஒண்மை + தமிழ் (அறிவின் செறிவும் நுட்பமும் கொண்டு ஒளிதரும் தமிழ்)


14) கனித்தமிழ்:- கனிகள் போன்ற இயற்கைச் சுவையுடைய தமிழ்


15) கற்கண்டுத்தமிழ்:- கற்கண்டு கடிதாய் இருப்பினும் சுவைக்கச் சுவைக்கக் கரைந்து இனிமை தருவது போல, அடர்ந்து செறிந்த நிலையிலும் மாந்தமாந்த மேலும் மேலும் இன்பம் பயக்கும் தமிழ்


16) கன்னித் தமிழ்:- எந்நிலையிலும் தனித்தன்மை கெடாமலும் இளமைநலம் குன்றாமலும் விளங்கும் தமிழ்


17) சங்கத்தமிழ்:- மன்னர்களாலும் புலவர்களாலும் சங்கங்கள் அமைத்துப் போற்றி வளர்க்கப்பட்டத் தமிழ்


18) சுடர்தமிழ்:- அறிவுக்கும் உணர்வுக்கும் சுடர்தரும் தமிழ்


19) சுவைத்தமிழ்:- சொற்சுவை, பொருட்சுவை, கலைச்சுவை, கருத்துச்சுவை என எல்லாச் சுவையும் செறிந்தது


20) செந்தமிழ்:- செம்மை + தமிழ் = எல்லா வகையிலும் செம்மை உடையது (செந்தமிழ் தகைமையால் அன்றே செந்தமிழ் எனப்பட்டது தமிழ்)


21) செழுந்தமிழ்:- செழுமை + தமிழ் - வளம் குன்றாத தமிழ்


22) தனித்தமிழ்:- தன்னேரிலாத தனித்தன்மை வாய்ந்த தமிழ்


23) தண்டமிழ்:- தண்மை + தமிழ் - குளிர்ச்சி நிறைந்தது


24) தாய்த்தமிழ்:- தமிழினத்தின் தாயாகவும் மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் மூலமாகவும் விளங்கும் தமிழ்


25) தீந்தமிழ்:- (தேன் > தேம் > தீம்) இனிமை நிறைந்த தமிழ்


26) தெய்வத்தமிழ்:- தெய்வத்தன்மை வாய்ந்தது


27) தேன்தமிழ்:- நாவுக்கும் செவிக்கும் சிந்தைக்கும் இனிமை பயக்கும் தமிழ்


28) பசுந்தமிழ்:- பசுமை + தமிழ் – என்றும் தொடந்து செழித்து வளரும் தமிழ்


29) பைந்தமிழ்:- பைம்மை + தமிழ் (பசுமை > பைம்மை)


30) பழந்தமிழ்:- பழமையும் தொடக்கமும் அறியாத தொன்மையுடைய தமிழ்


31) பாற்றமிழ்:- பால் + தமிழ் – பால் போன்று தூய்மையிலும் சுவையிலும் தன்மையிலும் இயற்கையானது


32) பாகுதமிழ்:- வெம்மையிலும் வெல்லம் உருகிப் பாகாகி மிகுசுவை தருவது போன்று, காய்தலிலும் கடிதலிலும் நயம் குறையாதது


33) நற்றமிழ்:- நன்மை + தமிழ் – இனிய, எளிய முறையில் எழுதவும் கற்கவும் பேசவும் கருவியாகி நன்மைகள் விளையத் துணைபுரிவது


34) நாடகத்தமிழ்:- முத்தமிழுள் ஒன்று – நாடகத்தின் மெய்ப்பாடுகளை நுட்பமாய் உணர்த்தும் சொல்வளமும் பொருள்வளமும் ஒலிநயமும் நிறைந்தது


35) மாத்தமிழ்:- மா – பெரிய – பெருமைமிக்க தமிழ் (மங்கலப் பொருளுணர்த்தும் உரிச்சொல் மா)


36) முத்தமிழ்:- இயல், இசை, நாடகம் என முத்திறம் கொண்டு அமைந்த தமிழ்


37) வண்டமிழ்:- வண்மை + தமிழ் (வளஞ்செறிந்த தமிழ்)


38) வளர்தமிழ்:- காலந்தோறும் வளர்ந்துகொண்டே வரும் தமிழ் 



நன்றி - பிரேம லதா

Tuesday, July 31, 2012

ஆதித் தமிழனின் அறிவு

Tamilnadu Temple

ஆதித் தமிழன் எந்த ஒரு செயலையும் " எடுத்தோம், கவிழ்த்தோம் " என்று செய்ததில்லை, தான் செய்து வைத்து விட்டு சென்ற ஒவ்வொரு விடயத்திற்கு பின்னாலும், " அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம், என்ற எண்ணற்ற விடயங்கள் அதனுடன் விட்டுச் சென்றிருக்கிறான்.ஆனால் அதனுடன் சேர்த்து அவன் செய்துவிட்டு சென்ற மிகப்பெரிய தவறு, அந்த ஒவ்வொன்றிற்கும் பின்னால் " கடவுள் " பெயரை சொல்லிவிட்டு சென்றது தான்,ஒருவேளை அவன் கடவுள் பெயரை கூறினாலாவது பயந்து கொண்டு அந்த விடயங்களை கடைபிடிப்பார்கள் என்ற தொலை நோக்கு பார்வையாக கூட இருந்திருக்கலாம், ஆனால் பாவம் அவனுக்கு தெரியாது, வரும் சந்ததியினர், கவர்ச்சி நடிகைக்கெல்லாம் கோயில் எழுப்பி,தான் பெரிதாக நினைத்த கடவுளையே கூட இழிவு படுத்துவர் என்று.


இன்றைக்கு பகுத்தறிவு என்ற பெயரில், நம் முன்னோர்களின் பல அறிய கண்டுபிடுப்புகளை நாளுக்கு நாள் நாம் அழித்துக் கொண்டு வருகிறோம் என்று தான் கூற வேண்டும்,கோவிலுக்கு செல்ல கூடாது,சாமியும் இல்லை,பூதமும் இல்லை, என்ற வாதம் தான் இன்றைய பகுத்தறிவின் வெளிப்பாடாக இருக்கின்றது.அது உண்மையா,பொய்யா என்பது தனி நபர் விருப்பத்திற்கு உட்பட்டது.ஆனால் நாளடைவில் அந்த விடயம் பலரால்,பலவிதமாக திரித்து இன்று நம் அடையாளங்களை இழக்கும் நிலைக்கு வந்து விட்டோம் என்பதே உண்மை.


கடவுளின் பெயரை கூறி நடக்கும் மூட நம்பிக்கைகளை தடுத்து நிறுத்துவது தானே உண்மையான பகுத்தறிவு?உதாரணத்திற்கு பவுர்ணமி அன்று கிரிவலம் வந்தால் நல்லது, என்பதற்கு பின்னால் கடவுளின் பெயரை கூறியதால் இன்று நாத்திகர்கள் அதை செய்வது இல்லை, ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல், முழு நிலவு அன்று நிலாவிலிருந்து வரும் ஒளிக்கதிரில் உள்ள ஒருவித " பாசிடிவ் எனர்ஜி " நாம் சுற்றிவரும் மலையின் மீது பட்டு,நம் உடலில் இறங்கினால் நல்லது என அதையே தான் இன்று விஞ்ஜானம் கூறுகின்றது.


இன்றைக்கு இருப்பதை போன்று கேளிக்கைகளுக்கு திரை அரங்குகளோ,கல்வி கற்பதற்கு "ஏரிகளின்" மேல் கல்லூரிகளோ, மருத்துவமனைகளோ அவர்கள் கட்டிவைக்க வில்லை, இவை அனைத்தும் நடந்தது ஓரே இடத்தில், ஒரு இடத்திற்கு சென்றால் அனைத்தையும் கற்க முடியும் என்றால் ( களவி உட்பட ) அது அன்று கோவில்களாக மட்டுமே இருந்துள்ளது, அது ஒரு பல்கலைக்கழமாகவே இருந்துள்ளது , அதனால் தான் கோவில் சிற்பங்களில் களவி சம்மந்தப்பட்ட சிற்ப்பங்கள் கூட காண நேர்கின்றது," கோவில்களில் கேளிக்கைகளுக்கு நாட்டியங்கள் அரங்கேறியுள்ளது, கல்வி கற்க பாட சாலைகள் அமைக்கப்பட்டது.


சில கோவில்கள் மருத்துவமனைகளாகவும் செயல்பட்டுள்ளது ,உதாரணத்திற்கு திருச்சி, திருவைகுண்டத்தை கூட கூறலாம் அங்கே ஆயிரம் வருடங்களுக்கு முன்னே,வெறும் மூலிகைகளை வைத்து "......." சர்ஜரி வரை நடைபெற்றுள்ளது. இன்றைக்கு இருப்பதை போன்று அன்று அனைவரும் மாடி வீடுகளில் தங்கி இருக்க வாய்ப்பில்லை ஆக பெரு வெள்ளம் வரும் போது, பெரும் பாறைகளால், பெரும் உழைபிற்கு மத்தியில் உருவான இந்த கோயில்களில் மட்டுமே மக்கள் தஞ்சம் அடைந்திருக்க கூடும் , கோவில் தூண்களில் தான் நம் கலைகளை வளர்த்துள்ளோம், அங்கே ஒவ்வொரு சிற்பமும் சொல்லும் கதை தான், இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள்.ஆயிரம் வருடங்களுக்கு மேல் நம்முடம் பயணிக்கும் கோயில்கள் அமைந்திருக்கும் இடம் சாதாரமாக தேர்வு செய்து கட்டி இருக்க வாய்புகள் இருக்காது.அந்த இடமானது பூமத்திய ரேகை கோட்பாடுகளின் படி அறிவியல் அமைப்புகளுடன் மட்டுமே கட்டப்பட்டிருக்கும், இன்றைக்கு இருக்கும் நிலப் பதிவு அலுவலகம் அன்று கிடையாது,கோவில் கல்வெட்டுகள் முழுவதும் தான் அது பதியப்பட்டுள்ளது,அந்த கல்வெட்டுகளில் தான் தமிழனின் வரலாறு புதைந்துள்ளது.


தஞ்சை பெரிய கோயில் கட்டியது " ராஜ ராஜன் " என்று ஹார்ட் டிஸ்கிலோ, பென்ட்ரைவிலோ பதியப்படவில்லை, அனைத்தும் கோயில் கல்வெட்டுகள் மூலமே நமக்கு தெரிய வருகின்றது, அப்படி இருக்க பகுத்தறிவின் பெயரில் இப்பேற்பட்ட நம் வரலாற்று சின்னங்களை கொஞ்சம், கொஞ்சமாக அழிப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று யோசித்து பாருங்கள் ! வரலாற்று அடையாளங்கள் வேண்டாம் ,மொழி மட்டும் போதும் என்பவர்கள் ,மரங்கள் வேண்டாம் ஆக்சிஜன் மட்டும் போதும் என்று முரண்பாடான கருத்தை கூறுவதைப் போன்றது என்பதை உணரவேண்டும்.


ஐயாயிரம் வருடத்திற்கு முன்பே தமிழன் சித்த வைத்தியத்தில் கூறிய மஞ்சளுக்கு வெளிநாட்டுக்காரன் உரிமை வாங்கி வைத்துள்ளான்,வீட்டு முற்றத்தில் தமிழன் வளர்த்த வேப்பமரத்திற்கு வெளிநாட்டுக்காரன் உரிமை வாங்கி வைத்துள்ளான், இன்னும் எதை எல்லாம் தொலைக்கைப்போகிறோம் ? மொழி கலப்படமாகிவிட்டது, உடை மேற்கத்திய உடை, கலப்படம் இல்லாமல் பழமையுடன் காட்சியளிப்பதும், நாம் பழமையானவர்கள் என்று ஆதாரத்துடன் நிரூபிப்பதும்,இந்த கோயில்களை வைத்து மட்டுமே என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்? அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச்செல்லவிருக்கிறோம்?


தொலைத்தது வரை போதும், மீதம் உள்ளவயேனும் காப்பாற்றுவோம்.வரலாற்று சின்னங்களான நம் கோவில்களை காப்போம்.அந்த சிலைகளில் கூறப்பட்டுள்ள செய்திகளை உலகறிய செய்வோம் !தமிழை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்வோம்.!!!


நன்றி: நண்பர் சசிதரன் 

Sunday, July 29, 2012

மின்சார மனிதன்

Electricity Man
பரமக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காற்றில் இருந்து மின்சாரம் தயார் செய்து அதன்மூலம் செல்போனை சார்ஜ் ஏற்றி வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பொன்னையாபுரத்தைச் சேர்ந்தவர் பிலவேந்திரன் மகன் பீட்டர்ஜான். எலக்ட்ரிகல் பணி செய்து வரும் இவருக்கு புது கண்டிபிடிப்புகளை தயார் செய்வதில் தனி ஆர்வம். தற்போது அவர் காற்றிலிருந்த மின்சாரம் உருவாக்கி அதன்மூலம் செல்போன் சார்ஜ் செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.

இந்த செல்போன் சார்ஜர் கருவியை பயணத்தின்போது ஜன்னல் ஓரம் வைத்தால் போதும். ஜன்னல் வழியாக வரும் காற்று, செல்போன் சார்ஜரில் உள்ள விசிறியை சுற்றும். அந்த விசிறி மின்சாரம் உற்பத்தி செய்யும் டைனமோவை சுற்றும். டைனமோ சுற்றுவதால் ஏசி மின்சாரம் உற்பத்தியாகிறது. செல்போனை டிசி மின்சாரம் மூலமே சார்ஜ் செய்யமுடியும். இதையடுத்து கிடைக்கும் ஏசி மின்சாரத்தை டிசி மின்சாரமாக மாற்ற சிறிய டையோடு பயன்படுத்தப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் அதிகரிக்கும்போது இதனுடன் இணைத்துள்ள செல்போன் சார்ஜ் ஆகிறது. இதற்கு தயார்செய்ய அதிகபட்சமாக ரூ.350 வரை செலவாகிறது. சைக்கிள் டைனமோ(6 வோல்ட்), தகடால் ஆன விசிறி, டையோடு(4007), வயர், சிறிய பெட்டி ஆகிய பொருட்களை கொண்டு இதை தயாரிக்கலாம். பஸ், ஆட்டோ, கார், பைக் கோன்ற வாகனங்களில் நெடுந்து£ரம் பயணம் செய்யும் பயணிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என அவர் கூறினார்.

நம்மக்கென்ன என்று இல்லாமல் ஒரு தமிழனின் சாதனையை உலகுக்கு எடுத்துரைப்போம்.

Thursday, July 26, 2012

காமராஜர்


இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம். நேற்று திருச்சி வேலுசாமி அவர்கள் எழுதிவரும் ஒரு புதிய புத்தகத்தை தொகுக்கும் வேலையில் இருந்தேன். அந்த காலம் இப்படியும் இருந்தது என உறக்கமின்றி தவித்தேன்...


“அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன். 
குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார். 


ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மாயாண்டி தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ருபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....


அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார். 


என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள்.


மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து 
யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார். 


மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல்ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை....


அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம் 
என புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.


முதர்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். நீங்கதான் மண்ணாங்கட்டியா...என்கிறார். ஆமாங்க ஐயா. நான் 
தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா...வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார். 


மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே...ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே. 
சமைக்கலயாமே....உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க...எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது 
தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...


அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம். 


மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்தது கையெழத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.


ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்....


நன்றி - ஏகலைவன். பா 

Friday, July 13, 2012

சிரிப்பு கடவுள்


7ம் வகுப்பு மாணவனின் கண்டுபிடிப்பு

படிக்கட்டு ஏறினால் மின்சாரம் வரும்
7ம் வகுப்பு மாணவனின் கண்டுபிடிப்பு..

#நாட்டில் தற்போது நடக்கும் இக்கட்டான நிலையில் இந்த மாதிரி கண்டுபிடிப்புகள் மிக அவசியமாகிறது..

அகிலா..சூப்பர்டா...வாருங்கள் தோழர்களே வாழ்த்துவோம்.!

Friday, June 29, 2012

ஒரு நிஜக் கதாநாயகன்..!

சோதனைகளை சாதனையாக்கிய ஏழை மாணவன். கண்ணீர்துளிகளை மலர்கொத்துகளாக மாற்றிய சிறுவன் மாரிசெல்வம்.ஒரு நிஜக் கதாநாயகன்..!

சோதனைகளை சாதனையாக்கிய ஏழை மாணவன். கண்ணீர்துளிகளை மலர்கொத்துகளாக மாற்றிய சிறுவன் மாரிசெல்வம்.

சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு (SSLC) முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்த நேரம். தேர்...வு எழுதிய மாணவர்கள் எல்லாம் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, தன் தாயார் சண்முகத்துடன் முதல் நாள் மூட்டிவைத்த கரிமூட்டதில் இருந்து கரி அள்ளிக்கொண்டிருந்தான் மாரி. அவனும் இந்த முறை SSLC தேர்வு எழுதியவன்தான். ஆனால் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

“மாரி… யாரோ உன்னத் தேடி வந்திருக்காங்க…” என்று அவனுடைய மூன்றாவது அக்கா பானுப்ரியா சொல்ல, அள்ளிப்போட்டுக்கொண்டிருந்த கரியை அப்படியே வைத்துவிட்டு வந்தவனை, அவனுடைய பள்ளி நண்பர்கள் வாரி அணைத்துத் தூக்கிக்கொண்டனர். “மாரி! நீ 490 மார்க் எடுத்திருக்கடா! District First டா…” என்று கூறி அவனைத் தூக்கிக் கொண்டாடியபோது, எதுவும் புரியாவிட்டாலும் தன் மகன் ஏதோ சாதித்துவிட்டான் என்று உணர்ந்து கண்கள் கலங்கி நின்றார் மாரியின் தாய் சண்முகம்.

மாரி என்கின்ற மாரிச்செல்வம், இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூக்கையூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவன். அந்த மாவட்டத்து மக்கள் பலருமே கூடக் கேள்விப்பட்டிருக்காத ஒரு குக்கிராமத்தில் இருந்து படித்துக்கொண்டே, அந்த மாவட்டத்தின் முதல் மாணவனாக மதிப்பெண் பெற்ற அவனை, அடுத்த நாள் வந்த பத்திரிகைகள் அனைத்தும் மாவட்டச் செய்திகளில் பட்டியல் இட்டன. ஆனால் அவன் பரீட்சை எழுதியபோது அவனது குடும்பச் சூழ்நிலையை அறிந்தவர்கள் கொஞ்சம் வியந்துதான் போனார்கள். சோதனை மேல் சோதனையைத் தாங்கிக்கொண்டு, ஓர் ஏழைச் சிறுவனால் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கமுடியுமா என தங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டவர்கள் பலர்.

PAD நிறுவனத்தில் Christian Children Fund of Canada (CCFC) எனும் கிராமப்புறக் குழந்தைகளுக்கான உதவித்திட்டத்தில் உதவி பெற்றுவந்த மாரி, +1 சேர நிறுவன உதவி கேட்டு வந்தபோதுதான் PAD பணியாளர்களுக்கே, தேர்வெழுதிய சமயத்தில் மாரி சந்தித்த துயரங்கள் தெரியவந்தது.

மூக்கையூர் கிராமம்தான் மாரியின் சொந்த ஊர். எட்டாவது வரை அந்த ஊரில் உள்ள புனித யாக்கோபு நடுநிலைப் பள்ளியில் படிப்பை முடித்த மாரி, மேற்கொண்டு படிக்க அங்கிருந்து வேறு பள்ளிக்குச் செல்லவேண்டியிருந்ததால்,அதிலுள்ள கஷ்டங்களை உணர்ந்தவனாய், “அம்மா, நான் மேல படிக்கல. அப்பா கூடத் துணைக்குக் கடலுக்குப் போறேம்மா” என்று கூறினான். அதற்கு மேல் அவனைப் பேசவிடாமல் தடுத்த மாரியின் அப்பா முனியசாமி, “வேணாம் மாரி, நீ போய்ப் படி. அப்பா எல்லாத்தையும் பார்த்துகிறேன். நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் PAD-ல உனக்கு உதவி வாங்கித் தாராங்க… நல்லாப் படிக்கணும்யா. இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது. உங்கக்கா பார்வதி நல்லாப் படிச்சாலும், எட்டாவதுக்கு மேல படிக்க உள்ளூர்ல ஸ்கூல் இல்லாததால படிக்க முடியாமப் போச்சுது. நீயாவது உன்னோட அக்கா வீட்டில போய் இருந்துகொண்டு மேல படிக்கப் பாரு. எப்படியாவது நம்ம வீட்டில நீயாவது படிச்சு நல்லாப் பிழைக்கணும். இதுதான் அப்பாவோட ஆசை” என்றார். அப்பாவின் வார்த்தைக்கு மறுப்பு ஏதும் கூறாமல் அவன் அக்காவின் வீடு இருக்கும் இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள வேலாயுதபுரம் என்னும் கிராமத்துக்குச் சென்று, அங்கிருந்த புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தான் மாரி.

மாரியின் அப்பா முனியசாமி ஒரு கடல் கூலித் தொழிலாளி. யாரேனும் கடலுக்குப் போவதற்கு மேலதிகமாக ஆட்கள் தேவைப்பட்டால் முனியசாமியும் போவார். அது இல்லாத நாட்களில் சிறு வலையை எடுத்துக்கொண்டு கரையோர மீன்பிடித் தொழில் செய்வார். அவருக்கு மாரியைப் பற்றிப் பல கனவுகள் இருந்தன. தனது குடும்பத்தில் ஒருவராவது படித்து முன்னேறி வரவேண்டும் என்று அவர் கனவு கண்டார்.

ஐந்து பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைககளைக் கொண்ட பெரிய குடும்பம் அவருடையது. கடின உழைப்பும் ஒழுக்கமான வாழ்க்கையுமே அதீத வறுமை அந்தக் குடும்பத்தை அண்டவிடாமல் காத்தது. நான்கு பெண்களுக்கும், ஒரு மகனுக்கும் திருமணம் முடித்துவிட்டார். எஞ்சியிருப்பது மாரியும், இன்னொரு அக்கா பானுப்ரியாவும்தான். மாரியைப் படிக்க வைக்கவேண்டும், சொந்தமாக ஒரு வள்ளம் வாங்கவேண்டும் என்று தன்னுடைய கனவுகளை அடைய இரவும் பகலுமாயக உழைத்துக்கொண்டிருந்த முனியசாமிக்கு மூளையில் கட்டி வந்து பல வருடங்களாக அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் முத்துப்பேட்டையில் அக்கா வீட்டில் படித்துக்கொண்டிருந்த மாரி படிப்பில் கவனம் செலுத்தியதோடு விடுமுறை நாட்களில் அவன் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலைக்கும், மாமாவுடன் (அக்காவின் கணவர்) கடல் தொழிலுக்கும் சென்று குடும்ப பாரத்தையும் விரும்பிச் சுமந்தான். “மாரி, இப்படிப் படிச்சா நல்ல மார்க் எடுக்கமாட்ட! இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்காப் படிக்க பாரு” என்று அவனுடைய அக்கா முருகேஸ்வரி அவனைக் கட்டுப்படுத்தி வந்தார். முருகேஸ்வரி மாரியின் மூத்த அக்கா. அவருக்கும் மூன்று பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை. மாரியையும் தனது மகன் போலவே வளர்த்து வந்தார். வீட்டுக்கு மூத்த பெண் என்பதால் தன் தந்தை வீட்டின் அனைத்து நலன்களிலும் பங்கெடுத்துவந்தார். முருகேஸ்வரியின் கணவர் முனியனும் பரந்த மனம் படைத்தவர். இருவரும் சேர்ந்துதான் முருகேஸ்வரியின் சகோதரிகளின் திருமணங்களை முடித்து வைத்தனர்.


தேர்வுகள் எழுத இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் மாரியின் தந்தை மூளையில் இருந்த கட்டி காரணமாக, சிகிச்சை ஏதும் பலன் அளிக்காமல் இறந்துபோனார். துவண்டுபோன மாரியை மீண்டும் பள்ளிக்குப் படிக்க அனுப்பப் பெரும் பாடு பட்டார் தாய் சண்முகம். அதன்பின் குடும்பச் சுமை முழுதும் தாய் சண்முகம் தலையில் விழ, அவரும் மகள் வீட்டில் இருந்து விறகு வெட்டச் செல்வது, கூலி வேலைக்குச் செல்வது, கரிமூட்டம் எனப் பல வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார். வறுமையின் மத்தியில் தன் படிப்பைத் தொடர்ந்த மாரி தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருந்தான்.

தேர்வு நாளும் வந்தது. முதல் இரண்டு தேர்வுகளையும் எழுதி முடித்து வந்த மாரியிடம், “பரீட்சை நல்லா எழுதிருக்கியா மாரி?” என அக்கா கேட்டார். “ஆமாக்கா. இன்னிக்கு English II பேப்பர். இனிதான் மேத்ஸ் பேப்பர் வரும். அதை நாளை மறுநாள் எழுதணும்” என்று பதில் சொல்லிக்கொண்டே அக்காவின் முகத்தைப் பார்த்த மாரிக்கு ஏதோ சரியில்லை என்று பட்டது. “என்னக்கா! என்னாச்சு?” என்று அவன் பதற, “ஒண்ணுமில்ல மாரி, நெஞ்சு கரிச்சிக்கிட்டே இருக்கு. அசதியா இருக்கு. சித்த நேரம் தூங்குனா சரியாயிரும்” என்றார். “சரிக்கா, நீ போய் தூங்குக்கா” என்ற மாரி தானே சோறு போட்டுச் சாப்பிட்டுவிட்டு படிக்கச் சென்றுவிட்டான்.

அன்று இரவு அவன் அக்காவுக்குக் கடுமையான நெஞ்சுவலி. ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த முருகேஸ்வரி, ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட கதறி அழுத மாரியை, “நாளைக்குப் பரீட்சை எழுதணும்… நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் உங்கக்கா ஆசைப்பட்டா” என்று அனைவரும் தேற்றினர். “மாரி, நீ போய் பரீட்சை எழுதிட்டு வா. அதுக்குப் பிறகு இறுதிச் சடங்கு வச்சுக்கலாம்” என அவன் மாமா கூறவும், அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, தன்னைத் தாயாக இருந்து பார்த்துக்கொண்ட சகோதரியின் பிணத்தருகே அழுதுகொண்டே படித்த மாரியை நினைத்து இப்போதும் கண்ணீர் வடிக்கிறார் அவன் தாய் சண்முகம்.”என்ன சார் மார்க் எடுத்தேன்.அம்மா மாதிரியிருந்த அக்கா சாவுக்கு அழக்கூட முடியாமல் பரீட்சைக்குப் படித்த பாவி சார்” என்று மாரி உடைந்து அழும் போது, நாமும் சேர்ந்து உடைய வேண்டிவருகின்றது.

அடுத்தநாள் அவன் பரீட்சை எழுதி முடித்துவிட்டு வரும்வரை அவனுடைய உறவினர்கள் காத்திருந்தனர். அவன் வந்ததும், அவனைக் கொண்டு அக்காவின் இறுதிச்சடங்குகளை நடத்தி முடித்தனர். சடங்குகள் அனைத்தும் முடிந்து, அடுத்த இரண்டு பரீட்சைகளையும் கனத்த இதயத்துடன் எழுதி முடித்தான் மாரி. பரீட்சைகள் முடிந்ததும் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலையில் இறங்கிவிட்டான்.

இந்த நிலையில்தான் அவனது தேர்வு முடிவுகள் வெளிவந்ததன.
அவனுடைய ஆசிரியர்கள், சக மாணவர்கள், அந்த ஊர் மக்கள் என் அனைவருக்குமே அவன் தேர்வு எழுதும்போது இருந்த நிலை நன்கு தெரியும். அப்படிப்பட்ட நிலையிலும் அவன் எடுத்த மதிப்பெண்கள் என்ன தெரியுமா? தமிழ் 95, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 98. சாதாரண நிலையில் இருக்கும் மாணவர்கள் இந்த மதிப்பெண்களை எடுக்கும்போதே ஆச்சரியப்படும் நமக்கு மாரியின் நிலையில் இருந்து பார்த்தால் பரிட்சையில் தேறுவோமா என்பதே சந்தேகம். அதிலும் அவனுடைய அக்காவின் இறுதிச் சடங்கன்று கணிதப் பரீட்சை எழுதி 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது? மாரியுடன் சேர்ந்து பரீட்சை எழுதிய அவனுடைய அக்கா மகள் நிர்மலாவும் 423 மதிப்பெண்கள் எடுத்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.
இத்தனை இடர்களுக்கும் மத்தியில் தனது 10-வது வகுப்பை முடித்துவிட்டு +1 சேர இருக்கும் மாரிக்கு இன்னும் பிரச்னைகளும் துன்பங்களும் முடிந்தபாடில்லை.

கடந்த சில வருடங்களாக மாரிக்கு ஓயாத தலைவலி. வறுமையும் அடுத்தடுத்து வந்த சோகச் சம்பவங்களும் உளவியல்ரீதியாக மாரியை மிகவும் பாதித்துள்ளது. தாங்கமுடியாத தலைவலியால் அவதியுறும் அவனை உள்ளூர் வைத்தியர்களிடம் காட்டியபோது பிரச்னை ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டனர் கோயம்புத்தூரில் ஒரு மருத்துவரை அணுகி விசாரித்தபோது மாரியின் இருதயத்தில் பிரச்னை இருப்பதாகவும் அதைச் சரிசெய்ய சிறிது காலம் தேவை எனவும், அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரி செய்ய 21 வயதுவரை பொருத்திருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர். சிகிச்சைக்கு உதவ PAD தொண்டு நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அடுத்து Biology, Maths குரூப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் மாரி, இன்னும் எந்தப் பள்ளியில் சேர்வது, மேற்கொண்டு படிப்புக்கு என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறான். அத்துடன் அவனுடைய தாய் சண்முகத்துக்கும் உடல்நிலை சரியில்லை. குடும்ப பாரம் முழுவதையும் சுமந்துகொண்டிருக்கும் மாமா முனியன் பற்றிய கவலையும் மாரியை அரிக்கிறது.

இப்படிப் பல இடர்களுக்கு மத்தியிலும், தன் மனவலிகளையும் உடல்வலிகளையும் தாங்கிக்கொண்டு தனது அடுத்த சாதனைக்குத் தயாராகி விட்டான் மாரிச்செல்வம்…




நன்றி: உலக தமிழ் மக்கள் இயக்கம்

இரத்த தானம்